Monday, March 5, 2012

ஒ! இது அவனே தான்!


மண்ணின் மணமிகு வாசனை
விண்ணின் வியத்தகு கர்ஜனை
சாளரங்களின் மேளதாள சத்தம்
திரைச்சீலைகளின் மோகினி ஆட்டம்
இசைந்து நடனமாடும் தளிர்
உடல் விறைக்கும் குளிர்
! இது அவனே தான்!

இடமின்றி போராடும்
இயற்கையின் பிள்ளைகளோடு
இன்னுமோர் போர்தொடுக்க - இம்சையாய்
வந்துவிட்டான் அவன்

ஒளித்து வைத்திருக்கும் அவன்
ஓயாத நினைவுகளை எல்லாம்
ஒட்டுமொத்தமாய் அவிழ்த்து விட - ஓசையோடு
வந்துவிட்டான் அவன்

சாவகாசமாய் சுற்றி அமர்ந்து
சர்வமும் சாரத்தோடு பேசிய
சரித்திரத் திண்ணைகளை ஈரம்செய்ய - சாரல்தூவி
வந்துவிட்டான் அவன்

சிரமமின்றி கப்பல்கள் செய்து
சாலைக்கடலில் போட்டியிடும்
சின்னஞ்சிறு ..சி.களுக்காக - சிநேகத்தோடு
வந்துவிட்டான் அவன்

நீர் மறந்த குளம் குட்டைகளையும்
நீள் வரிசை வெற்றுக்குடங்களையும் கன நேரத்தில்
நிரப்பி வேடிக்கை பார்க்க - நிதர்சனமாய்
வந்துவிட்டான் அவன்

காடும் நாடும் குளிர்ந்திருக்க
காதல் பூக்கள் மலர்ந்திருக்க
காற்றில் வாசம் கலந்திருக்க
கொட்டு கொட்டென்று கொட்டிக்கொண்டு
வந்தேவிட்டான் அவன்
அவனே தான் அந்த "மழை" க்கள்ளன்.

No comments: